திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திராட்சை விவசாயத்தை பாதுகாக்க அரசு குளிர்பதனக் கிடங்கு அமைத்துத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமலாபுரம் ஊத்துப்பட்டி , கொளிஞ்சுபட்டி, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் பன்னீர் திராட்சை என்று அழைக்கப்படும் கருப்பு நிற திராட்சைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
மருத்துவகுணம் நிறைந்த இந்த திராட்சைகள் உள்ளூர், வெளியூர் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் திராட்சைகளில் வெளிச்சந்தைக்கு அனுப்பியது போக எஞ்சிய 30 சதவீத திராட்சைகள் சந்தை படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு புதிதாக குளிர்பதனக் கிடங்கு அமைத்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உற்பத்தி செய்த திராட்சைகளை விற்பனை செய்யமுடியாமலும் அவற்றை பாதுகாக்க முடியாமலும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.