திருச்சி: முசிறியில் சக மாணவர்கள் தாக்கி உயிரிழந்த மவுலீஸ்வரன் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்த, தோளூர்பட்டியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற மாணவர் பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே எதிர்பாரத விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, முசிறி டிஎஸ்பி யாஸ்மின் சம்பந்தப்பட்ட மாணவர்களை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்து 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த செய்தியறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன்,மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த நிகழ்வின்போது பணியில் கவனக் குறைவாக இருந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், மவுலீஸ்வரன் வீட்டிற்கு நேரில் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.