நாகர்கோவில்: குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவர், நேற்று முன்தினம் வடசேரியில் இருந்து காரில் பூதப்பாண்டி சென்று கொண்டிருந்தார். வடசேரி எம்.ஜி.ஆர். சிலை அருகே கார் சென்ற போது வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்கவே அவரை ஏற்றிக்கொண்டார். தாழக்குடி செல்ல வேண்டும் என கூறி அந்த நபர், தனது பெயரை சலீம் என கூறி உள்ளார். இறச்சக்குளம் - தாழக்குடி ரோட்டில் சென்ற போது, மேலும் 3 பேர் காரை வழி மறித்து ஏறினர். அவர்கள் காரில் இருந்த வாலிபருடன் சேர்ந்து, கான்ட்ராக்டரை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2,000 மற்றும் 2 பவுன் செயின் ஆகியவற்றை பறித்தனர். பின்னர் அவரது செல்போனை பறித்து கூகுள் பே மூலம் ரூ.75 ஆயிரத்தை எடுத்தனர். யாரிடமும் சொல்லக்கூடாது என அவரை மிரட்டி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இது குறித்து கான்ட்ராக்டர் புகாரின்படி, சிசிடிவி காட்சியை வைத்து பூதப்பாண்டி போலீசாரும், சைபர் க்ரைம் போலீசாரும் விசாரித்து வருகின்றனர். எந்த வங்கி கணக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.