சென்னை: மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ளது வடசென்னை அனல்மின் நிலையம். இங்குள்ள, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1வது நிலையின் 2வது அலகில் நிலக்கரி பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
