தண்டையார்பேட்டை: ‘விழி காணும் நிழல்’படம், வரலாற்றின் வழித்தடம்’ என்ற தலைப்பிலான முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் பார்வையிட்டு பாராட்டினர். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘விழி காணும் நிழல்’படம், வரலாற்றின் வழித்தடம்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற முதல்வரின் புகைப்பட கண்காட்சியை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ‘இந்த கண்காட்சியை ஒரு அறிவு காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் இதைப் பார்த்து பயன்பெற வேண்டும். அடக்குமுறைகளால் எந்த ஒரு கொள்கையையும், லட்சியத்தையும் அடக்கிவிட முடியாது. திராவிடத்தை பொறுத்தவரையில் யாராலும் அசைக்க முடியாது. அதற்குக் காரணம் முதல்வரின் கொள்கை பிடிப்பு,’ என்றார் இந்த புகைப்பட கண்காட்சியை காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், சென்னை மாநகராட்சியின் துணைமேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.