சென்னை: சுங்கக்கட்டணத்தை உயர்த்தும் முடிவை திரும்ப பெறவேண்டும் என ஒன்றிய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவிலேயே சுங்கச்சாவடிகள் அதிகம் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. சுங்கக் கட்டண உயர்வு என்பது மக்கள்மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் செயலாகும். இதன்மூலம் வாகன வாடகைக் கட்டணம் உயர்த்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் நிலை ஏற்படும். சுங்கக் கட்டண உயர்வு என்பது ஒரு சங்கிலி இணைப்பைப் போன்றது.
இதனைத் திரும்பப் பெற வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பொதுமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், சுங்கக் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்து விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளை குறைக்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒன்றிய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.