கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் விலை உயர்ந்த மரங்கள் எரிந்து சேதமாகின. கொடைக்கானலில் மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வந்ததாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வனப்பகுதியில் செடி, கொடிகள், புற்கள் காய்ந்து கருகி வருகின்றன.
கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி கிராமத்தில் பட்டா நிலங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ பரவியது. இப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயும் வேகமாக பரவியது. காட்டுத்தீயால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. 2 ஏக்கரில் பற்றி எரிந்த தீயால் விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாகின. நீண்டநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.