சென்னை: சங்கிலி, செல்போன் பறிப்பு, வீடு புகுந்து திருடுதல் குற்றங்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த 23 குற்றவாளிகள் இருப்பிடம் கண்டறிந்து விசாரணை நடத்தப்பட்டது.
துணை ஆணையர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்றுமுன்தினம் ஒரு நாள் சிறப்பு சோதனை செய்தனர். இந்த சிறப்பு தணிக்கையில் சங்கிலி, செல்போன் பறிப்பு மற்றும் வீடு புகுந்து திருடுதல் போன்ற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 448 குற்றவாளிகளை நேரில் சென்று தணிக்கை செய்யப்பட்டு, குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுத்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
ஒரே நாளில் 75 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் பெற்றும், 17 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த 23 குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டறிந்து விசாரணை செய்யப்பட்டது. போலீசாரின் இந்நடவடிக்கைகளால், குற்ற பின்னணி நபர்கள் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு வருவதுடன், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
