அரியலூர்: அரியலூர் அருகே காதல் திருமணத்தை கண்டித்த தந்தையை சரமாரி குத்தி கொலை செய்த அவரது மகன் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கருப்பிலாக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் (48). விவசாயி. இவரது மனைவி இறந்து விட்டார். இவருக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இளைய மகன் அருண் (24) திருப்பூரில் வேலை பார்த்தபோது கடந்த ஆண்டு அங்கு வேலை பார்த்த ஒரு பெண்ணை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் காதல் மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இவர்களது காதல் திருமணம் அர்ச்சுனனுக்கு பிடிக்கவில்லை. ஒரு அக்கா, அண்ணன் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில் நீ எப்படி திருமணம் செய்து கொண்டாய் என கேட்டு மகனிடம் தகராறு செய்தார். நேற்று முன்தினம் இரவு போதையில் வந்து மகனிடம் காதல் திருமணத்தை தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த அருண் கத்தியால் தந்தையை சரமாரி குத்தி கிழித்தார். இதில் அர்ச்சுணனின் கழுத்து, தலையின் பின்புறம் மற்றும் முகத்தில் சரமாரி கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி அருணை கைது செய்தனர்.
