மும்பை: கொரோனா தொற்றுக்காலத்தில் தவறான தகவல் பரவியதால் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். புனேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த இளைஞர் 20 மாநாட்டில் கலந்து கொண்டு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது: கொரோனாவின் போது தவறான செய்திகளை பரப்பியதுடன் தவறான தகவல்களை தெரிவித்ததன் காரணமாகவே பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர்.
சிலநேரங்களில் தொழில்நுட்பம் பயனுள்ளதா என்று நாங்கள் சிந்திக்க வேண்டியதாயிற்று. இப்போது உலகளவில் இந்தியா பற்றிய கண்ணோட்டம் மாறிவிட்டது. இந்த மாற்றம் ஆக்கப்பூர்வமான மாற்றம். இன்று தனது நலம் பற்றி தானே முடிவெடுக்கும் நிலையில் இந்தியா உயர்ந்து நிற்கிறது. அதாவது வேறு யாரையும் நம்பியிருக்க வேண்டிய நிலை இல்லை. இப்போது புருவங்களை உயர்த்தி அல்லது கண்களை தாழ்த்தி பார்க்கும் நிலையில் இந்தியா இல்லை. நேருக்கு நேர் பிரச்னைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம். உலகளவில் இந்தியாவின் நிலை உயர்ந்து கொகொண்டே போகிறது. இவ்வாறு தெரிவித்தார்.