×

கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலையில் ஓவர்லோடு...ஓவர் ஸ்பீடு... வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

கம்பம்: கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலையில், அளவுக்கு அதிகமான கூலித்தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது போலீஸ் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, வாகன பேக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் கூலித்தொழிலாளர்கள் கேரளப்பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு, வண்டன்மேடு, நெடுங்கண்டம், மாலி, கட்டப்பனை, பத்துமுறி, கடசிக்கடவு, ஜக்குபள்ளம், ஆனவிலாசம், புளியமலை, ஓடைமேடு போன்ற பகுதிகளிலுள்ள ஏலம், காபி, மிளகு தோட்டங்களுக்கு கூலிவேலைக்கு சென்று திரும்புகின்றனர்.

இப்பகுதிகளுக்குச் செல்ல தமிழ்நாடு அரசு பஸ்கள் வசதிகள் இருந்தாலும், தொழிலாளர்களை தோட்டத்திற்கு அழைத்துச்சென்று திரும்ப கொண்டுவந்துவிட தோட்ட நிர்வாகத்தினர் ஒப்பந்த முறையில் வண்டிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் சில வாகனங்களில் நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பம் மெட்டு, குமுளி மலைச்சாலைகளில் அசுர வேகத்தில் இந்த வண்டிகள் அணிவகுத்துச் செல்வதால் விபத்துக்களும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. மாலை நேரங்களில் வேலை முடித்து தொழிலாளர்களை திரும்ப அழைத்துவரும்போது, இந்த ஜீப்புகள் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று முந்திச்செல்கின்றன. அந்த நேரத்தில் ரோட்டில் நடைபயிற்சி செல்பவர்களும், சைக்கிள் மற்றும் டூவீலர்களில் செல்பவர்களும் மிகுந்த பீதிக்குள்ளாகின்றனர்.

ஒரு வண்டியில் 8 முதல் 10 பேர்கள் வரையில் மட்டுமே செல்ல அனுமதியிருந்தும், அறிவுறுத்தப்பட்டும், 15 முதல் 20 கூலித் தொழிலாளர்கள் வரை ஒரே வண்டியில் ஏற்றிச் செல்கின்றனர். கடந்த ஆண்டுகளில் மட்டும் ஜீப்புகளின் அதிவேக விபத்தால் 30 க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உரிமத்தில் குறிப்பிட்டுள்ளதை விட அதிகமாக ஆட்களை ஏற்றக்கூடாது. வாகனத்திற்கு அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும். ஓட்டுநருக்கு உரிமம் இருக்க வேண்டும். ஒவ்வொரு வண்டிக்கும் குறைந்தது 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

நகர் பகுதியிலும், மலைப்பாதையிலும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தக் கூடாது. அதிக வேகமாக செல்ல கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது என காவல் துறையின் பல்வேறு உத்தரவுகள் இருந்தாலும் பலரும் இதனை பின்பற்றுவது இல்லை.போலீசார் சோதனையிலிருந்து தப்பிக்க சிலர், போலீஸ் சோதனைச்சாவடிக்கு முன்பாகவே அதிகமாக ஏற்றிவந்த ஆட்களை இறக்கிவிட்டு, நடந்து சென்று சோதனைச்சாவடியை கடந்த பின்பு ஏற்றிச் செல்கின்றனர். வாகன உரிமை சான்றில் குறிப்பிட்ட பயணிகளுக்கு மேல் ஏற்றி செல்வதால் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை கிடைக்காமல் போகிறது.

எனவே மோட்டார் வாகனச்சட்டத்தின் படி வாகனத்தை இயக்கி கொள்ளலாம் என போலீசார் அவ்வப்போது தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்குவதோடு, ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதைவிட கூடுதலாக அதிக தொழிலாளர்களை ஏற்றிச்செல்லக்கூடாது என அறிவுறுத்தியும், அறிவிப்பை வாகனங்களில் ஒட்ட கொடுத்தும் ஓட்டுனர்கள் யாரும் இதை பொறுப்புடன் எடுத்துக்கொள்வதில்லை. தொழிலாளர்களின் உயிரோடு விளையாட்டு நடத்தும், இதுபோன்றவர்கள் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாகனங்களில் அளவுக்கு அதிகமான கூலித்தொழிலாளர்களை ஏற்றிச்செல்வதை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கம்பத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்நாதன் கூறுகையில், ‘‘பெரும்பாலும் அனுபவமில்லாத சிறு வயதுடையவர்களே ஜீப் டிரைவர்களாக உள்ளனர். வண்டி ஒன்றை ஒன்று முந்திச்செல்ல வேண்டும் என இவர்கள் போட்டிபோட்டு ஓட்டிச் செல்வதாலேயே விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த விபத்தினால் பல கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்து அவர்களின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. அதிக அளவில் கூலித் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களை சோதனைச்சாவடி போலீசாரும் கண்டு கொள்வதில்லை. அதிகாரிகள் விபத்து நடந்தபின் சோதனை மேற்கொள்வதை விடுத்து அளவுக்கதிகமான கூலித் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால் இனிவரும் நாட்களில் பல அப்பாவி கூலித்தொழிலாளர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்’’ என்றார்.


Tags : Kampamettu ,Kumuli hill road , Gampammettu, Kumuli Hill Road, Overload, Vehicular Traffic, Need Regularization, Public Request
× RELATED கம்பம்மெட்டு சாலையில் சீரமைப்பு பணி துவங்கியது