×

விளைச்சல் அதிகரிப்பு... விலையோ குறைவு...குப்பைக்கு செல்லும் செண்டு மல்லி பூக்கள்: சோகத்தில் ஆண்டிபட்டி விவசாயிகள்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் செண்டு மல்லி பூக்கள் விளைச்சல் அதிகரித்தும் கிலோ ரூ.10க்கு விலை போனதால் பூக்களை விவசாயிகள் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கன்னியபிள்ளைப்பட்டி, ராஜதானி, கொத்தபட்டி, சித்தார்பட்டி, தெப்பம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்கள் ஆண்டிபட்டி பூமார்க்கெட்டில் ஏல அடிப்படையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். பூக்களின் தேவை அடிப்படையில் ஏலம் நடத்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செண்டுமல்லி பூக்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளதால், கடந்த சில நாட்களாக ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக செண்டு மல்லி பூக்கள் சாகுபடியில் குளிர்காலங்களில் செடிகள் சிறுத்து பூக்களின் வரத்து குறைந்து காணப்படும். அதேபோல் கோடை காலங்களில் அதிகளவு பூக்கள் வரத்து வரும்.
கடந்த வாரம் வரையில் ஆண்டிபட்டி பூமார்க்கெட்டிற்கு ஒருநாளைக்கு 200 கிலோ அளவில் செண்டுமல்லி பூக்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது 2 டன் அளவிற்கு பூக்களின் வருகை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக செண்டு மல்லி பூக்களின் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ செண்டு பூக்கள் 30 ரூபாய் வரையில் விற்பனையான நிலையில், தற்போது ரூ.10க்கும் குறைவாகவே விலை போகிறது.

இந்த விலை பூக்கள் பறிக்கும் செலவிற்கு கூட போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர். இதனால் பூக்களை பறித்து சந்தைக்கு கொண்டு வந்த விவசாயிகள், போதுமான விலை கிடைக்காததால் பூக்களை கீழே கொட்டிவிட்டு செல்கின்றனர். மேலும் சில விவசாயிகள் பூக்கள் மூடைகளை குப்பை வண்டியில் வீசிவிட்டு செல்கின்றனர். அதிகமாக பூக்கள் விலையும் ஆண்டிபட்டி பகுதியில் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் வாசனை திரவிய நிறுவனம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Increase in yield...Lower price...Centu Malli flowers go to waste: Antipatti farmers in grief
× RELATED சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி...