×

4 வீட்டு வைத்தியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

தலைவலி

தலைவலி, சளி உட்பட பல்வேறு காரணங்களால் வரக்கூடும். ஒற்றைத் தலைவலிக்கும் பல காரணங்கள் உள்ளன. தற்காலிகமான நிவாரணத்துக்கு ஓர் எளிய கைவைத்தியம் உள்ளது. ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

சளி, இருமல் & காய்ச்சல்

சளி தொடக்க நிலையில் இருக்கும்போது நீலகிரித் தைலம் அல்லது விக்ஸ் போன்ற கை மருந்துகளைக் கொண்டு ஆவி பிடித்தாலே போதுமானது. நீலகிரித் தைலத்தை நெற்றி, மார்பு, முதுகு, தொண்டை ஆகிய பகுதிகளில் அழுத்தித் தேய்த்துக்கும்போது சருமத்தின் வழியாக ஊடுருவி உடலில் உள்ள நஞ்சை முறித்து நிவாரணம் தரும்.

சளிக் காய்ச்சல் இருந்தால் வெந்நீரைக் குடிப்பது, கஞ்சி, ரசம் சோறு போன்ற நீராகாரங்களைப் பருகுவது, நெற்றியில் ஈரத்துணியால் பத்துபோட்டு உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றைச் செய்தாலே போதுமானது. மூக்கில் சளி ஒழுகுவது நின்ற பிறகு, தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தூதுவளை லேகியம் அல்லது தூதுவளை பொரியல், ரசம் ஆகியவை சாப்பிட இருமல் கட்டுக்குள் வரும்.

வறட்டு இருமல்

எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும். தூதுவளை லேகியமும் வறட்டு இருமலுக்கு மிகவும் ஏற்றது.

தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி

தொண்டை கரகரப்புக்கு சளி, தட்ப வெப்ப மாறுபாடு, புகையிலைப் பழக்கம் எனப் பல காரணங்கள் உள்ளன. வெந்நீரில் உப்பிட்டு அந்த நீர் தொண்டைப் பகுதியில் படும்படி வாய் கொப்பளித்தாலே தொண்டைக் கரகரப்பு கட்டுப்படும். தொண்டை வலிக்கும் இந்தக் கைவைத்தியம் உதவும். தொடர் கரகரப்பு இருந்தால், சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொண்டை வலிக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி நல்ல கூட்டணி. எடுத்தவுடன் ஆன்டிபயாட்டிக் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

தொகுப்பு:  ராணி

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!