புதுடெல்லி: ‘இயற்கை பேரழிவுகளை கையாள்வதில் எதிர்வினையாற்றுவதை விட, சேதங்களை குறைப்பதற்கான அணுகுமுறையை தேவை’ என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பேரிடர் அபாயங்களை குறைப்பதற்கான தேசிய அமைப்பின் (என்பிடிஆர்ஆர்) 3வது அமர்வு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:
இயற்கை பேரழிவுகளை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவற்றால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கான கட்டமைப்பை நம்மால் உருவாக்க முடியும். எனவே, இயற்கை பேரிடர்களை கையாள்வதில், அசம்பாவிதம் நடந்த பிறகு எதிர்வினையாற்றுவதை விட, முன்கூட்டியே சேதங்களை தடுப்பதற்கான செயல்திறன் மிக்க அணுகுமுறையும், நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் பயன்படுத்த வேண்டும்.
பேரிடர் பாதிப்பை குறைக்க, பாரம்பரியமான வீடு கட்டுமானம் மற்றும் நகர திட்டமிடல் செயல்முறை எதிர்கால தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் முழு உலகிற்கும் பேரழிவை எதிர்க்கும் முன்மாதிரியை நாம் உருவாக்க முடியும். இந்தியா இப்போது உலகளாவிய பேரழிவுகளுக்கு விரைவாக உதவுகிறது. சமீபத்தில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பிறகு இந்தியாவின் பேரிடர் நிவாரணப் பணிகளை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டியிருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.