செங்கல்பட்டு: சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, குஷ்பூ சுந்தருக்கு தலைசிறந்த பெண்மணி விருது வழங்கப்பட்டது. காட்டாங்கொளத்தூரில் இயங்கிவரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சார்பில், சர்வதேச பெண்கள் தினவிழா நேற்று நிறுவனத்தில் அமைந்துள்ள டி.பி.கணேசன் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் வேந்தரும், பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான பாரிவேந்தர் தலைமை வகித்தார். துணைவேந்தர் முனைவர் முத்தமிழ்ச்செல்வன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ சுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: ‘‘பெண் என்றால் முதலிடம் அம்மாவிற்கு, எனது அம்மாவிற்கு படிப்பு இல்லை. குடும்பத்தில் பொருளாதாரம் இல்லை. தனது பிள்ளைகள் கல்வி பெறவேண்டும் என்பதற்காக வாழ்ந்து கட்டியவர். எனது முன்னேற்றத்தில் முதலிடம் அம்மாவிற்கு தான் இந்த மேடையில் இடம்பெற்றுள்ள பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துகொண்டு இருப்பவர்கள். சமுதாயத்தில் பெண்களுக்கான அதிகாரம் பெற்றிட கல்வி அவசியம். பெண்களுக்கு கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம், மிகப்பெரிய சொத்து. எனவே பெண்கள் கல்வி கற்க வேண்டும். நான் ஒரு சாதனையாளர், சாதிக்க பிறந்தவள் என்ற எண்ணம் உங்களிடயே உருவாக வேண்டும். பெண்கள் தின விழாவை ஆண்டுக்கு ஒரு முறை என்பது தினந்தோறும் கொண்டாட வேண்டும்.’’ என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் குஷ்பூ சுந்தருக்கு தலைசிறந்த பெண்மணி என்ற விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் முன்னாள் மாணவியும், ஆர்.ஆர் வன உயிரினம் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் ராதிகா ராமசாமி கவுரவ விருந்தினராக பங்கேற்றார். விழாவில் கீதா சிவகுமார், பத்மப்ரியா ரவி, மணிமங்கை சத்தியநாராயணன், எஸ்ஆர்எம் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, கூடுதல் பதிவாளர் முனைவர் மைதிலி, சேர்க்கை இயக்குனர் முனைவர் லட்சுமி, ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் மாணவர் விவகார இணை இயக்குனர் முனைவர் நிஷா அசோகன் நன்றி கூறினார். எஸ்ஆர்எம் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.