காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மகளிர் தின விழாவில் மிஷன்-11 என்கிற திட்டத்தை துவக்கி வைத்து, ‘ரத்தசோகை இல்லாத காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்குவதே நோக்கம்’ என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற மகளிர் தினம் விழா கொண்டாட்டத்தில், மிஷன்- 11 என்கிற திட்டத்தை கலெக்டர் ஆர்த்தி நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். பின்னர், கலெக்டர் ஆர்த்தி பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிஷன்-11 மூலம், ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு 11gm /d1 கீழே வராமல் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 19 முதல் 30 வயது உடைய ஆண் மற்றும் பெண்களுக்கு பார்த்து கொள்வதன் மூலம், ரத்த சோகை இல்லா காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்குதல் மற்றும் அனமியா மக பாரத் திட்டத்தின் மூலம் 6 மாதம் முதல் 60 மாtத குழந்தைகள் 5 வயது முதல் 19 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் இரும்புச்சத்து டானிக், இரும்புச்சத்து மாத்திரை உட்கொள்பவரை கண்காணித்தல் இரும்பு சத்து உணவு உண்பது, கழிவறைகள் பயன்படுத்துதல், காலணிகளை உபயோகப்படுத்துதல், ரத்த சோகை வராமல் தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கர்ப்பணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 19 முதல் 30 வயது பெண்கள், ஆண்களுக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டு, ரத்த சோகை உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து ரத்தசோகை இல்லா காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்குவதே மிஷின் 11 திட்டத்தின் நோக்கமாகும். இதனால், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆர்த்தி தெரிவித்தார். முன்னதாக, மிஷின்-11 திட்டத்திற்கான லோகோவை கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார். இதில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பிரியராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.