சென்னை: உடுமலையை சேர்ந்த சங்கர் சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரான கவுசல்யா தாக்கல் செய்த மனுவில், சாதி மறுப்பு திருமணம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறேன். சங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மார்ச் 12ம் தேதி மாலை உடுமலை குமாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தேன். அதற்கு காவல்துறை எந்த பதிலும் அளிக்கவிவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நேற்று நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த கடந்த 7 ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்படவில்லை.
உள்ளரங்க கூட்டமாக நடத்திக்கொள்ளலாம். இந்த கூட்டத்தை நடத்துவதில் தங்களுக்கு விருப்பமில்லை என்று சங்கரின் சகோதரர் மனு அளித்துள்ளார். அப்பகுதியில் சங்கரின் உறவினர்கள் உள்ளனர். சங்கரின் குடும்பத்தார் மூலம் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பிருக்கலாம். இந்த காரணங்களுக்காகத்தான் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஆணவ கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடத்தப்பட்டால்தான் பொதுமக்களுக்கு அது சென்றடையும். நினைவேந்தல் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.