பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது வதந்தி என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அமன் குமார், ராகேஷ் திவாரி, யுவராஜ் சிங் ராஜ்புத், மனீஷ் காஷ்யப் ஆகிய 4 பேர் மீது முதல் வழக்கை பதிவு செய்தனர். பல முறை சம்மன் அனுப்பப்பட்டும் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இருவரும் தலைமறைவாகினர். இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மனீஷ் காஷ்யப், யுவராஜ் சிங் மற்றும் மேலும் இரண்டு பேர் மீது போலீசார் நேற்று இரண்டாவது வழக்கை பதிவு செய்தனர்.