ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் பழுதடைந்த பாலாற்று மேம்பாலத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை பாலாறு பழைய மேம்பாலம் கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த பாலம் வழியாக சென்னை, திருவண்ணாமலை, பெங்களூர் போன்ற பல்வேறு நகரங்களுக்கு கனரக வாகனங்கள் சென்று வந்தன. பெரிய நகரங்களுக்கு 4 வழி பாதை கொண்டுவரப்பட்டதால் பாலாற்று பழைய மேம்பாலம் அருகே இரண்டு புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதனிடையே பழைய மேம்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதானது.
மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆகியவை சார்பில் சென்னை-பெங்களூர் செல்ல 2 புது பாலாற்று மேம்பாலங்கள் உபயோகப்படுத்தவும், பழைய மேம்பாலம் பழுதானதால் அதில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்தும் உத்தரவிட்டது. ஆனால் இதனை கடைபிடிக்காமல் வாகனங்கள் பழைய பாலாற்று மேம்பாலத்தின் வழியாகவே செல்கின்றன. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பழுதான பழைய மேம்பாலத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.