காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் எல்காட் நிறுவனத்தின் சார்பில் 234 வது நிரந்தர ஆதார் மையம் மாங்காடு நகராட்சி அலுவலகத்தில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆகியோர் திறந்து வைத்து, பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து 235 வது ஆதார் மையமாக திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 236 வது ஆதார் மையமாக கருங்குழி பேரூராட்சி அலுவலகத்திலும், 237 வது ஆதார் மையமாக அச்சரப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்திலும் காணொளிக்காட்சி வழியாக திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 2022 வரை 86,71,157 எல்காட் மையம் மூலமும், பள்ளிக்கல்வித்துறை ஆதார் மையங்களின் மூலமும் 3,15,592 பரிவர்த்தனைகள் நடைபெற்றது. ஆதார் தொடர்பான அனைத்து பணிகளும் பொது மக்களுக்கு அரசு நிறுவனம் எல்காட் மூலம் செய்து தருதல். புதிய ஆதார் பதிவு செய்தல் (பிறந்த குழந்தை முதல் பதிவு செய்யலாம்), முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் மாற்றம், பெயர், பாலினம், பிறந்த தேதி மாற்றம், பயோமெட்ரிக் (கைரேகை மற்றும் கருவிழி மேம்படுத்துதல்). 5 வயது மற்றும் 15 வயது கடந்தவர்களுக்கு கட்டாய கைரேகை மற்றும் புகைப்படம் மேம்படுத்துதல் ஆகிய சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். ஆதார் மையமானது காலை 10:00 மணி முதல் மாலை 5:45 வரை இயங்கும்.
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பேசியதாவது: இன்று பல்வேறு பகுதிகளில் இ-சேவை மையங்கள் மற்றும் நிரந்தர ஆதார் மையங்கள் அதிக அளவில் புதிதாக திறக்கப்படுகின்றது. இது 234வது மையம் ஆகும். இது தவிர மேலும் மூன்று மையங்கள் காணொளிக்காட்சி வழியாக திறந்து வைக்கப்பட்டது. இது தவிர 86.23 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆதார் தொடர்பான அனைத்து பணிகளும் பொது மக்களுக்கு அரசு நிறுவனம் எல்காட் மூலம் செய்து தரபடும். அரசு நிறுவனம் எல்காட் மூலம் நிரந்தர ஆதார் மையங்கள் மூன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடைபெறும். அதாவது புதிய ஆதார் பதிவு செய்தல் முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் மாற்றம், பெயர், பாலினம், பிறந்த தேதி, பயோமெட்ரிக் கைரேகை மற்றும் கருவிழி மேம்படுத்தல்.
5 வயது மற்றும் 15 வயது கடந்தவர்களுக்கு கட்டாய கைரேகை மற்றும் புகைப்படம் மேம்படுத்துதல் போன்றவை மையத்தில் எளிதாக செய்ய முடியும். மேலும் பல இடங்களுக்கு சென்று இச்சேவைகள் செய்வது சிரமமாக இருப்பதினால் அக்குறைகளை நீக்க இம்மையங்கள் பல்வேறு இடங்களில் செயல்படுமாறு செய்யப்பட்டுள்ளன. இந்த ஓராண்டு காலத்தில் 225 சேவைகள் இ-சேவை மையத்தின் மூலம் நடைபெறுகின்றன என தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி, மாங்காடு நகராட்சி தலைவர், சுமதி முருகன் மற்றும் மாங்காடு நகராட்சி துணைத்தலைவர் பட்டூர்.எஸ்.ஜபருல்லா மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.