×

பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்-வீடியோ எடுத்து மிரட்டல்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

வேப்பூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். விடுமுறை முடித்து பள்ளிக்கு சென்ற அந்த மாணவி முக்கியமான புத்தகங்களை எடுத்து வராமல் வீட்டிலேயே வைத்து விட்டு வந்தாராம். கடந்த 7-ந்தேதியன்று வீட்டிற்கு போன் செய்து யாரையாவது எடுத்து வரச் சொல்லலாம் என்று கருதிய மாணவி தன்னிடம் செல்போன் இல்லாததால் பள்ளி அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் வீட்டுக்கு போன்பேசிவிட்டு தருகிறேன் என அவரது செல்போனை கேட்டுள்ளார். உடனே அந்த வாலிபர் மாணவியிடம் நம்பர் வாங்கி வீட்டுக்கு போன் செய்து உடனே கட் செய்துள்ளார். பின்னர் போன் போகவில்லை, நான் ஜெயங்கொண்டம் பகுதிக்கு தான் செல்கிறேன். என்னுடன் வா, உனது வீட்டிற்கு அழைத்து செல்கிறேன். புத்தகத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வரலாம் என கூறினார். இதனை நம்பிய அந்த மாணவி, வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றார்.
 
ஆனால் ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் செல்லாமல் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சாலையில் நல்லூர் நகர் பகுதியில் உள்ள காட்டுக்குள் பைக் சென்றது. பின்னர் அங்கிருந்த சவுக்கு தோப்பிற்கு மாணவியை அழைத்து சென்ற வாலிபர் பாலியல் சீண்டல் செய்தார். இதனை எதிர்பாராத மாணவி, வாலிபரிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனால் தப்பமுடியவில்லை. அந்த வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதனை தான் மறைத்து வைத்திருந்த செல்போனிலும் வீடியோவாக எடுத்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளத்தில் பரவ விடுவேன் என்று மாணவியை மிரட்டினார்.  இதற்கிடையே மாணவியின் தாயார் தனக்கு வந்த மிஸ்டு கால் நம்பருக்கு மீண்டும் போன் போட்டபோது அந்த வாலிபர் உங்கள் மகள் புத்தகம் எடுத்து வர மறந்துவிட்டாராம், இதனால் போன் பண்ணினேன் என்று கூறிவிட்டு கட் செய்து விட்டாராம்.

பின்னர் போன் வந்ததை காட்டிக்கொள்ளாமல் அந்த வாலிபர் மாணவியை மீண்டும் பைக்கில் ஏற்றி விருத்தாசலத்தில் விட்டுவிட்டு தப்பி விட்டார். பயந்து போன மாணவி அங்கிருந்து பஸ் ஏறி வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் புகார் அளித்தனர். அவர் இது குறித்து விசாரணை நடத்த வேப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில் செல்போன் எண் மூலம் துப்பு துலங்கியது. இதில் மாணவியை பைக்கில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்தது ஸ்ரீ முஷ்ணம் பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி என்பவரது மகன் ஜீவா (24) என்பது தெரியவந்தது. இவர் கேட்டரிங் முடித்து விட்டு தற்போது சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்து போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.



Tags : Kidnapping schoolgirl and threatening to rape-videotape: Youth arrested under POCSO Act
× RELATED பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த...