ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புதூர் அருகே வீண் தகராறில் காலி மதுபாட்டிலால் அடித்து டிபன் கடைக்காரரை கொலை செய்த வழக்கில் ஒரு மாதத்துக்கு பிறகு டோல்கேட் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ பெரும்புதூர் அருகே பென்னலூர் சுங்கச்சாவடி அருகில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் முட்புதரில் எலும்புக்கூடு கிடப்பதாக ஸ்ரீ பெரும்புதூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது எலும்புக்கூடு அருகில் செல்போனும் கிடந்துள்ளது. பின்னர், எலும்புக்கூட்டை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இறந்து கிடந்தவர் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வகுமார் (28) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர், ஸ்ரீ பெரும்புதூர் டோல்கேட் அருகில் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். பென்னலூர் சுங்கச்சாவடியில் வேலை செய்து வரும் ஆனந்தன் (எ) அருண்குமார் (32) என்பவர் தினமும் இரவில் செல்வகுமார் டிபன் கடைக்கு வந்து சாப்பிடுவாராம்.
இதனால் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். வியாபாரம் முடிந்ததும் இருவரும் சேர்ந்து மது அருந்துவார்களாம். மது அருந்தும்போது செல்வகுமார், அடிக்கடி அருண்குமாரை பார்த்து உன்னை சாகடிக்கபோறேன் என விளையாட்டாக பேசுவதுவழக்கமாம். கடந்த பிப்ரவரி மாதம் 7ம்தேதி இருவரும் காட்டுபகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது செல்வகுமார் குடிபோதையில், அருண்குமாரிடம் உன்னை சாகடிக்க போறேன் என மீண்டும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் அருகில் இருந்த காலி மதுபாட்டிலை எடுத்து செல்வகுமார் தலையில் ஓங்கிஅடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து செல்வகுமார் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனால் பயந்துபோன அருண்குமார், செல்வகுமாரின் உடலை இழுத்து சென்று அருகில் இருந்த முட்புதரில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அருண்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.