×

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி தமிழ்நாடு அரசு, ஆளுனருக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமாகாவை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டம் தொடரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதன் முக்கிய காரணம் ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டன. குறிப்பாக, ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்களின் வாழ்வு ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாது என்று நினைக்கிறோம். மேலும், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று ஏற்கனவே த.மா.கா சார்பில் வலியுறுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தினேன். தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டு வருகிறோம்.

இருப்பினும், ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமாக தமிழ்நாடு அரசின் மசோதாவை ஆளுநர் அரசுக்கு திருப்பி அனுப்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமாக மீண்டும் மசோதா நிறைவேற்றப்படும் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. எனவே, இதன் முக்கியத்துவத்தை கருதி தமிழ்நாடு அரசும், ஆளுநரும் இதில் உள்ள சட்டச்சிக்கலை தீர்க்கக்கூடிய வண்ணம், ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : GK ,Vasan ,Tamil Nadu , GK Vasan urges Tamil Nadu govt to end online gambling
× RELATED கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ப...