விழுப்புரம் : வேலை வழங்குவதாக கூறி ஆரோவில் வாலிபரிடம் பணத்தை மோசடி செய்த கும்பலிடமிருந்து விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் அதனை மீட்டு பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைத்தனர்.விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் மகன் ஹரிஷ்சந்திரா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் வேலைகளை தேடிக்கொண்டிருந்தார். அதனை அறிந்த ஒரு கும்பல் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும், அதற்கு முன் பணம் செலுத்த கோரியும் டெலிகிராம் மூலம் அனுப்பப்பட்ட லிங்க்கில் சிறிது சிறிதாக 3 தவணையாக ரூ.1.90 லட்சத்தை ஹரிஷ்சந்திரா செலுத்தியுள்ளார். ஆனால் வேலை வழங்காமல், பணத்தை வாங்கி நூதன முறையில் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அந்த கணக்கிலிருந்த ரூ.1.90 லட்சத்தை மீட்ட போலீசார் நேற்று சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி. கோவிந்தராஜ், பாதிக்கப்பட்ட நபரிடம் இந்த பணத்தை வழங்கினர். சைபர் குற்றங்களுக்கு 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். என்று தெரிவித்துள்ளனர்.