×

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணை மின் கம்பத்தில் கட்டிவைத்து சித்ரவதை செய்த 3 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது: 2 பேருக்கு போலீசார் வலை

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கேலி கிண்டல் செய்த ஆட்டோ ஓட்டுநர்களை பெண் ஒருவர் தட்டி கேட்டதால் அவரை ஆட்டோ ஓட்டுநர்கள் மின் கம்பத்தில் கட்டி போட்டு சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த  பெண் ஒருவர் கணவனை இழந்த நிலையில், தனது 9 வயது மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் தனிமையில் இருப்பதால் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதியவர் தனது மகளை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தான் நடத்தி வரும் மசாஜ் சென்டருக்கு மேல்புறம் வழியாக செல்லும் போது அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் ஒரு சிலர் தினசரி அவரை கேலி கிண்டல் செய்தும் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்தும் துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் பயந்து போனவர் தனது பாதுகாப்பிறக்காக மிளகாய்ப்பொடியும் , கத்தியும் கைவசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அந்தப்பெண் தனது மசாஜ் சென்டருக்கு போவதற்காக மேல்புறம் பகுதிக்கு வந்தபோது அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு சிலர் மீண்டும் அவரை பார்த்து கிண்டல் செய்தபடி அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர் தன் கைவசம் வைத்திருந்த மிளகாய்ப்பொடியை எடுத்து ஆட்டோ டிரைவர்கள் மீது எறிந்து தன்னை காப்பாற்ற முயன்றுள்ளார். உடனே அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் ஒரு சிலர் அவரை பலவந்தமாக பிடித்து கை கால்களை துணியால் கட்டி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர் ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்கம்பத்திலேயே கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அருமனை போலீசார் மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவருக்கு நேர்ந்த கொடுமைகளை போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்தனர். கடந்த 8-ம் தேதி பெண்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று ஒரு பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Tags : Kannyakumari district , 3 auto drivers arrested for torturing woman by tying her to an electric pole in Kanyakumari district: Police nab 2
× RELATED மாலத்தீவில் தவித்த 12 மீனவர்கள் குமரி திரும்பினர்