சென்னை: நன்னடத்தை பிணையை மீறி தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த ரவுடிக்கு 904 நாட்கள் சிறை தண்டனை வழங்கி செயல் முறை நடுவராகிய திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திலிப்குமார் (29). ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக ரவுடி திலிப்குமாரை கடந்த ஆண்டு ஆகஸ்டில் கைது செய்தனர். அப்போது திருவல்லிக்கேணி துணை கமிஷனர் முன்பு நேரில் ஆஜராகி இனி நான் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்று 3 ஆண்டுகள் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால் அந்த நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறும் வகையில் ரவுடி திலிப்குமார் வடபழனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 25ம் தேதி வடபழனி போலீசார் கஞ்சா விற்பனை செய்ததாக ரவுடி திலிப்குமாரை கைது செய்தனர். இந்நிலையில் 3 ஆண்டு கால நன்னடத்தை பிணை பத்திரம் ஆவணத்தை மீறி மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் ரவுடி திலிப்குமாருக்கு செயல்முறை நடுவராகிய திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் 3 ஆண்டு காலத்தின் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையில் இருந்த நாட்களை கழித்து மீதமுள்ள 904 நாட்கள் பிணையில் வெளியே வர முடியாத சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். அதைதொடர்ந்து போலீசார் ரவுடி திலிப்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.