பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு குருசாமி ராஜாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் கருப்பா (எ) ரகுபதி (30), ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு, திருமணமாகி கீதா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளன. ரகுபதி மீது பேசின்பிரிட்ஜ், புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருவதால், தொடர்ந்து வழக்குகளில் சிக்கினார். இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கொடுங்கையூர் முத்தமிழ் நகர் தெற்கு அவென்யூ சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி பெயர்ந்து அங்கு வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7.30 மணி அளவில், முத்தமிழ் நகர் தெற்கு அவென்யூ சாலை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ரகுபதி உட்கார்ந்து இருந்தார். அப்போது, 2 ஆட்டோக்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், திடீரென கத்தியை எடுத்து ரகுபதியை வெட்டினர். இதனால், வலி தாங்கமுடியாமல், அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற ரகுபதியை, பின்தொடர்ந்து சென்று, பாலாஜி என்பவரது வீட்டு வாசலில் வைத்து சரமாரியாக வெட்டினர்.
இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த ரகுபதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது. இதனால், அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரகுபதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரகுபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரகுபதிக்கும், அவரது நண்பரான சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், ஆட்களை அழைத்து வந்து ரகுபதியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சுரேஷ் உள்ளிட்ட கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.