×

பொள்ளாச்சி அருகே சோகம் பிரிட்ஜ் வெடித்து தீப்பற்றியதில் அயனாவரம் இன்ஸ்பெக்டர் பலி: சமையல் செய்ய வந்த பெண்ணும் உயிரிழப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நேற்று காலை வீட்டில் பிரிட்ஜ் வெடித்ததில் சென்னை அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டரும், சமையல் செய்ய வந்த பெண்ணும் உடல் கருகி பலியானார்கள். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே  நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சபரிநாத் (40). இவர், சென்னை அயனாவரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவரது மனைவி, உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.  இதையடுத்து வீட்டின் கீழ் தளத்தை வாடகைக்கு விட்டிருந்தார். மேல் மாடியை விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து நல்லூர் செல்லும்போது பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பொள்ளாச்சி வீட்டிற்கு சபரிநாத் சென்றார்.

நேற்று காலை அவரது வீட்டின் கீழ் தளத்தில் குடியிருந்த சாந்தி (37), சமையல் செய்வதற்காக சபரிநாத் வீட்டிற்கு வந்தார். அப்போது  திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.  கீழ் வீட்டில் இருந்த சாந்தியின் உறவினர்கள் மேலே சென்று பார்த்தபோது, சபரிநாத், சாந்தி இருவரும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடியது தெரிந்தது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் வந்து தீயை அணைத்து இருவரையும் மீட்பதற்குள் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும், பிரிட்ஜ் வெடித்துதான் இருவரும் உடல் கருகி இறந்தார்களா? அல்லது சமையலறையில் ஏதேனும் தீப்பிடித்ததில் பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



* 6 விருதுகளை பெற்றவருக்கு காவல் நிலையத்தில் அஞ்சலி  கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் சபரிநாத் (40). கடந்த 24.2.1982ம் ஆண்டு பிறந்த இவர், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பொள்ளாச்சி மற்றும் கோவையில் முடித்துள்ளார். எம்ஏ பட்டதாரியான இவர், தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 18.1.2008ம் ஆண்டு உதவி ஆய்வாளராக தேர்வானார். பல்வேறு இடங்களில் சிறப்பாக பணியாற்றிய இவர் தமிழ்நாடு காவல்துறையில் 6 விருதுகள் பெற்றுள்ளார்.  சென்னை மாநகர காவல்துறையில் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சபரிநாத், தற்போது அயனாவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பணியாற்றி வந்தார். இவருக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் நன்றாக தெரியும். திருமணமான இவர், கடந்த 3ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு சென்று இருந்தார்.

இந்நிலையில், வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் திடீரென மின் கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் குளிர்சாதன பெட்டி வெடித்து சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அயனாவரம் காவல் நிலைய போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் சபரிநாத் புகைப்படத்தை காவல் நிலையத்தில் வைத்து உடன் பணியாற்றிய போலீசார் கண்ணீருடன் மலர் அஞ்சலி செலுத்தினர்.



Tags : Ayanavaram ,Sogam ,Bridge ,Pollachi , Ayanavaram Inspector killed in Sogam Bridge explosion and fire near Pollachi: Woman who came to cook also died
× RELATED பேருந்து – கார் மோதி விபத்து; 3 பேர் பலி 28 வீரர்கள் காயம்: ம.பி.யில் சோகம்