சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து திட்ட பகுதிகளிலும் விளையாட்டு, பேச்சு, ஓவியம் போட்டி நடத்தப்பட்டதாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக வாரியம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சமூகத்தில் பாலின பாகுபாடுகளை களையவும், பெண்களை ஆற்றல்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் தண்ணார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் பெண்களின் திறன் வளர்க்கும் விதமாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, தையல் பயிற்சி, அழகுகலை பயிற்சி, கணினி பயிற்சி, ஓட்டுநர் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் அவர்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் வகையில் தொழில் முனைவோர்களாக உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக அனைத்து திட்டப்பகுதிகளிலும் பெண்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள், பேச்சு போட்டிகள், ஓவிய போட்டிகள் மற்றும் மகளிரின் தனித் திறன்களை வெளிபடுத்தும் விதமாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.