சோமனூர்: விசைத்தறிக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு பாராட்டு விழா கருமத்தம்பட்டியில் வருகிற 11ம் தேதி நடக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டு வரும் மாநாட்டு திடலை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் முயற்சியில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட்டும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட்டும் இலவச மின்சாரம் வழங்கி அறிவித்துள்ளார்.
இதற்காக முதலமைச்சருக்கு நெசவாளர்கள் சார்பில் நடத்தப்படும் நன்றி பாராட்டும் விழா கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வருகிற 11ம் தேதி (சனி) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். இந்நிலையில் பாராட்டு விழா நடத்தும் மாநாட்டு திடலை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, மாநில நெசவாளர் அணி செயலாளர் நாகராஜன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
அமைச்சருடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், கருமத்தம்பட்டி நகரச் செயலாளர் நித்யா மனோகரன், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.அன்பரசு, சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், ஆனைமலை வடக்கு ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து, சிபி செந்தில் குமார், கலங்கல் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.