
ஏடன்: ஏமனில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது படகு கவிழ்ந்து 21 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் அங்கு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹொடைடா என்ற துறைமுக நகரம் உள்ளது. இது, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் உள்ள கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள படகில் புறப்பட்டனர். பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர், படகில் இருந்தனர்.
ஹொடைடா நகர் அருகே செங்கடலில் படகு சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இதில் அனைவரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். தகவலறிந்து கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் என 21 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிய 6 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.
அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அதே சமயம் கடலில் வீசிய பலத்த காற்றினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஏமனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.