×

பொள்ளாச்சி அருகே நல்லூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் சபரிநாத் பலி..!!

கோவை: பொள்ளாச்சி அருகே நல்லூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் சபரிநாத் உயிரிழந்தார். பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயது சபரிநாத். இவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல்நல குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். விடுமுறை நாட்களில் அவ்வப்போது அங்கு வருவது வழக்கம். அதன்படி இன்று காலை ஆய்வாளர் சபரிநாத் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது அவர் வீட்டில் குடியிருந்த 37 வயதான சாந்தி என்பவர் சமையல் செய்வதற்காக சபரிநாத் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. அதனால் கீழ் வீட்டில் குடியிருக்கும் சாந்தியின் உறவினர்கள் மேலே சென்று பார்த்த போது சபரநாத் மற்றும் சாந்தி ஆகியோர் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அது குறித்து தீயணைப்பு துறைக்கும், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் காவல் துறை ஆய்வாளர் சபரிநாத் மற்றும் சாந்தி ஆகியோர் இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். வீட்டில் இருந்த பிரிட்ஸ் வெடித்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அது குறித்து விபத்து நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இரு சலங்களையும் போலீசார் மீட்டு உடற்கூறாய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டில் இருந்த பிரிட்ஸ் வெடித்து காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Sabrinath ,Chennai ,Nallur ,Pollachi , Pollachi, house, fire, Chennai, police inspector, killed
× RELATED பொன்னமராவதி அருகே ஊராட்சி செயலரை தாக்கியவர் மீது வழக்கு