கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே வடகரைப்பாறை வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் பண்ணைக்காடு பிரிவு அருகே வடகரைப்பாறை பழங்குடி கிராம வனப்பகுதியில் சந்தன மரங்கள் அதிகளவில் உள்ளன. இதனையொட்டி உள்ள சில பகுதிகளில் தொடர்ந்து சந்தன மரங்கள் வெட்டப்பட்டு வருவதாக வந்த தகவலையடுத்து, வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். வடகரைப்பாறை பகுதியில் வசித்து வந்த ஆதிவாசி மக்களையும் கண்காணிக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.
நேற்று காலை வடகரைப்பாறை வனப்பகுதிக்குள் மரம் வெட்டும் சத்தம் கேட்கவே, ஆதிவாசி மக்கள் சென்று பார்த்த போது 2 பெண்கள் உள்ளிட்ட 3 நபர்கள் சந்தன மரத்தினை வெட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக ஆதிவாசி மக்கள் மூவரையும் மடக்கிப்பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கொடைக்கானல் வனத்துறை அலுவலகத்திற்கு 3 பேரையும் அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் தேவதானப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (57), வெள்ளைத்தாயி (55), போதுமணி (50) என்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த சந்தனமரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு இவர்கள் 3 பேரும் இதுபோன்ற வேறு எதுவும் வனப்பகுதியில் சந்தனம் மரம் வெட்டினரா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.