சென்னை: தமிழக அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்குவது மற்றும் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்த பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சில அறிவிப்புகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை (பட்ஜெட்) வரும் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். தற்போது பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. கடந்தாண்டை போல் இந்தாண்டும் காகிதம் இல்லாத இ-பட்ஜெட்டாக மின்னணு வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகளை வரும் பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் வரும் 20ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்க வேண்டிய புதிய திட்டம், அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும். மேலும், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ள சலுகைகள் மற்றும் அனுமதி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. முக்கியமாக, திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட மகளிர் உரிமைத் தொகையாக பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது உள்ளிட்ட சில அறிவிப்புகளை வரும் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இது குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழக அரசு வரும் 20ம் தேதி தாக்கல் செய்ய உள்ள 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
* தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ள சலுகைகள் மற்றும் அனுமதி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.