துரைப்பாக்கம்: நீலாங்கரை அருகே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் மர்ம நபர்களால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரை, சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் என்கிற கண்மூடி முருகன் (20). இவரை நேற்று மேட்டுக்குப்பம் வெங்கடேஸ்வரா அவென்யூவில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் யாரோ கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கு உடலை வீசி சென்றுள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், முருகன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இங்குள்ள கட்டிடம் மற்றும் அங்குள்ள காலி இடத்தில் சிலர் மது அருந்துவதும், நேற்று அங்கு முருகன் நான்கு பேருடன் மது அருந்த வந்ததாகவும், போதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முருகன் குத்தி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகளை துரைப்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.