சென்னை: அதிமுக - பாஜக மோதல் முற்றுகிறது. பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைவதால் அதிமுக - பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்த அண்ணாமலை, எதற்கும் எதிர் வினை உண்டு என்று பதிலடி கொடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, செய்கையில் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார். இதனிடையே நான் பாஜகவின் மேலாளர் அல்ல; ஜெயலலிதா போன்ற தலைவர் என்று அண்ணாமலை கூறியதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுகவின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போய்விடுவார் ஏற்கனவே ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். பாஜகவின் மாநில தலைவர் பொறுப்பு என்பது நாடு தழுவிய கார்ப்பரேட் நிறுவனத்தின் கிளை மேலாளர் பதவிக்கு நிகரானதே என அதிமுக விமர்சனம் செய்தது. ஜெயலலிதா, கலைஞர், போன்ற தலைவர்களுடன் மேலாளர்களை ஒப்பிட முடியாது என்றும் அதிமுக ஐடி விங் நிர்வாகி கோவை சத்யன் விமர்சனம் செய்தார்.
ஜெயலலிதா, கலைஞர் போன்றவர்கள் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றும், பாஜக மாநில தலைவர் பொறுப்பு அடிப்படையானது அல்ல என்றும் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தலைவர் தேர்வு எப்படி என்பது முக்கியமல்ல; எப்படி செயல்படுகிறார் என்பதே முக்கியம் என்று அதிமுகவுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. அண்ணாமலையின் செயல்பாட்டுக்கு அதிமுகவின் சான்றிதழ் தேவையில்லை என்றும் அமர்பிரசாத் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவினரின் கண்டனத்துக்கு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டியின் பதிலடியால் இரு கட்சிகளின் இடையே மோதல் முற்றுகிறது.