கோவை: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணை பிடிக்க கோவை மாநகர போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். பிரகா சகோதரர்கள் என்கின்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர்கள் குழு பொம்மை துப்பாக்கிகள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை கோவையை சேர்ந்த பிரபல ரவடிகள் தீவிரமாக பின்பற்றி வந்தனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோதினி என்கிற தமன்னா (23) என்ற இளம்பெண்ணும் பிரகா சகோதரர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் தீவிர உறுப்பினராக இருப்பவர்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் புகைப்பிடிப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவர் பல ஆண்டுகளாக கோவையில் உள்ள பீளமேடு, காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகிறார். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இளம்பெண் வினோதினி என்ற தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது போன்று 2வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பெண் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் நட்பாக பழகி தனது நண்பர்களின் உதவியுடன் பணம் பறித்துள்ளார். வீடியோக்கள் மூலம் 2 ரவுடி குழுக்களுக்கு இடையே பகையை வளர்க்கவும் முயற்சி செய்துள்ளார். விரைவில் வினோதினியை கைது செய்து சிறையில் அடைப்போம்’’ என்றார். கடந்த 2021ம் ஆண்டு பீளமேடு போலீசார் வினோதினி என்கிற தமன்னா மற்றும் சூர்யா என்கிற சூர்யபிரசாத் ஆகியோரை 2 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்துள்ளனர். வினோதினி நர்சிங் டிப்ளமோ முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.