கோவில்பட்டி: தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலை காலி செய்திடுவார், இதுதான் நடக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக 4 அணிகளாக உடைந்துள்ளன. அதில் டிடிவி தினகரன் மட்டும் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலாவோ அதிமுகவின் பொதுச் செயலாளர் நான்தான் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதேநேரத்தில் அதிமுக தங்களுக்குத்தான் சொந்தம் என்று எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூறி வருகின்றனர்.
இதனிடையே அண்ணாமலைக்கு நெருக்கமான ஐடி விங் நிர்வாகி சி.டி.நிர்மல்குமார், அதிமுகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்தார். அவரது ஆதரவாளரும் மாநில நிர்வாகியுமான திலிப் கண்ணன் அதிமுகவில் இணைந்தார். இதனால் கடும் கோபமடைந்த அண்ணாமலை, எதற்கும் எதிர் வினை உண்டு என்று பதிலடி கொடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, செய்கையில் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார். பாஜக நிர்வாகிகளை இழுக்க அதிமுகவில் ஒரு குழுவை இந்தக் குழு பாஜகவில் அதிருப்தியில் குறிப்பாக அண்ணாமலையால் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் அம்மு (எ)ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணை தலைவர் டி.விஜய் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். இந்தநிலையில், பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா, உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் இன்று அதிமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு இனி தொடரும் என்று அதிமுக தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்; அப்போது; அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது.
அண்ணாமலையைப் பிடிக்கவில்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் வெளிப்படையாக கூறிவிட்டு எங்கள் கட்சியில் இணைந்துள்ளார்கள். நாங்கள் சேர்க்கவில்லை என்றால் திமுகவில் இணைந்திருப்பார்கள். எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறியவர் அண்ணாமலை. அப்படிப்பட்டவர் ஏன் இன்று பதற்றம் அடைய வேண்டும்? ஏன் பதற்றத்துடன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. அவரது செயல்பாடு விந்தையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. அண்ணாமலைக்கு ஏன் இந்த பதற்றம்.. நிர்மல்குமாரிடம் என்ன ரகசியம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலை காலி செய்திடுவார், இதுதான் நடக்கும். அதிமுகவை எதிர்ப்பது கானல் நீராக முடியும் எனவும் கூறினார்.