மூணாறு : மூணாறில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அம்பர்கிரிஸ் விற்க முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.கேரள மாநிலம், மூணாறில் வனத்துறையின் சிறப்பு பறக்கும் படையினருக்கு அம்பர்கிரிஸ் (திமிங்கில எச்சம்) விற்பனை குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளிடம் வனத்துறை அதிகாரிகள், அம்பர்கிரிஸ் வேண்டும் என அணுகியுள்ளனர். அதன்பின், மூணாறு சிஎஸ்ஐ தேவாலயம் அருகில் காத்திருந்த மூணாறு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (55), சதீஷ்குமார் (48) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் விலை மதிப்புள்ள அம்பர்கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள மூணாறு பகுதியை சேர்ந்த பாக்கியசாமி, பிரேம் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.