ஆந்திரா : ஆந்திராவில் கபடி விளையாடி கொண்டு இருந்த கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் அச்சம்பள்ளிதாண்டாவைச் சேர்ந்தவர் 18 வயதான தனுஜ் குமார் நாயக். அனந்தபூரில் உள்ள பிவிகேகே கல்லூரியில் இளங்கலை பார்மசி படித்து வந்த அவர், கடந்த 1ம் தேதி கல்லூரி மைதானத்தில் கபடி ஆடிக் கொண்டு இருந்த போது, திடீரென மயங்கி சரிந்தார்.
இதையடுத்து அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் தனுஜ் குமார் நாயகிற்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த தனுஜ் குமார் நாயக், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில வருடங்களாக இளைஞர்களுக்கு மாரடைப்பு நோய் வந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் கபடி வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.