சென்னை: பாஜவுக்கான பி-டீம் அரசியலை பீகாரிலேயே செய்யட்டும் என்றும், தமிழ்நாட்டில் அத்தகைய நயவஞ்சக எண்ணத்துடன் வர வேண்டாம் என்றும் சிராக் பஸ்வானுக்கு திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநில சகோதரர்களின் நிம்மதியைகெடுக்கும் வகையில் சுயநல அவதூறு அரசியலை பாஜ செய்வதும், அதற்கு லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் துணை போவதும் கடும் கண்டனத்திற்குரியது.
இந்நிலையில் தாங்கள் காலம் காலமாகச் செய்து வந்த பொய்களைப் பரப்பும் தொழில் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்பதால், சிராக் பஸ்வானை துணைக்கு அழைத்து ஆறுதல் தேடியிருக்கிறார்கள்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிரான வலிமையான கூட்டணியைக் கட்டமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்து, அதற்கு அச்சாரமாக தனது 70வது பிறந்தநாள் விழா மேடையையே களமாக மாற்றியதில், கும்பி எரிய இந்த பொய்ப் பரப்புரை மேற்கொள்ளப்படுவதை அறியாதவர்கள் அல்ல மக்கள். எனவே, சிராக் பஸ்வானை வைத்து நடத்தும் நாடகங்களையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ள வடமாநில தொழிலாளர்களிடையே பாஜவின் விஷமத்தன பிரசாரத்திற்கு துணை போக வேண்டாம் என ராம் விலாஸ் பஸ்வானின் மகனுக்கு எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
சமூகநீதிக் கருத்தியலை நெஞ்சில் தாங்கிச் செயல்பட்ட ராம்விலாஸ் பஸ்வானை, அவருடைய கடைசிக் காலங்களில் பா.ஜ. தனது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டதை அவரது மகன் உணர்ந்து, அவர்களது வலையில் வீழாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். எனவே, சிராக் பஸ்வானுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். பாஜவுக்கான பி-டீம் அரசியலை பீகாரிலேயே செய்யட்டும், தமிழ்நாட்டில் அத்தகைய நயவஞ்சக எண்ணத்துடன் வர வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.