×

ஒன்றிய அரசு வேலையில் வடவர் ஆதிக்கம் தடையை மீறி சாஸ்திரிபவன் முற்றுகை: த.பெ.தி.கழகத்தை சேர்ந்தவர்கள் கைது

சென்னை:  ஒன்றிய அரசு அலுவலகங்களில் பார்ப்பனர் மற்றும் வடவர் ஆதிக்கத்தை கண்டித்து, சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழர்களை தவிர்த்து, திட்டமிட்டு பார்ப்பனர் மற்றும் வடவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் விதிகளின்படி தமிழகத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்த வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை மாவட்டம் சார்பில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் சாஸ்திரி பவன் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் திட்டமிட்டபடி நேற்று காலை 11 மணிக்கு சாஸ்திரி பவன் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில், புதுச்சேரி மாநில தலைவர் புதுகை மோகன், சீர்காழி மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம், சென்னை மாவட்ட செயலாளர் குமரன், ஜனவிஜய் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். ஒன்றிய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தியபடி, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் பார்பனர் மற்றும் வடவர்களை நியமிக்காதே... திரும்ப பெறு திரும்ப பெறு பணி அமர்த்தப்பட்ட பார்ப்பனர்களை திரும்ப பெறு... என்று கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக செல்ல முயன்றனர்.


அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் பேரணியாக முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசாரின் தடையை மீறி சாஸ்திரி பவனை நோக்கி சென்றதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து போலீசார் முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.


Tags : Shastribhavan ,Northern ,Union government ,PTI Kazhagam , Shastri Bhavan siege: Members of PTI arrested
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...