×

நாகாலாந்து, மேகாலயாவில் முதல்வர்கள் பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு

கோஹிமா: நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் இன்று புதிய அரசின் பதவியேற்பு விழாக்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மேகாலயா, நாகாலாந்து, திரிபுராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 26 ெதாகுதிகளை ஆளும் தேசிய மக்கள் கட்சி கைப்பற்றியது. பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் முதல்வர் கான்ராட்  சங்மாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால், பாஜகவின் இரண்டு எம்எம்ஏக்கள்  உள்பட 45 எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது. அதையடுத்து கான்ராட் சங்மா இன்று இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன் சேர்த்து 12 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

தேசிய மக்கள் கட்சிக்கு 8, கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கு 2, பாஜக மற்றும் மலைவாழ் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒன்று என அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் நாகாலாந்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜக இடையேயான கூட்டணி  மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி  மீண்டும் ஆட்சி கைப்பற்றியது. நெய்பியூ ரியோ மீண்டும் முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் இல.கணேசன்,  ரியோவுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மேற்கண்ட இரு பதவியேற்பு விழாவிலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா  ஆகியோர் கலந்து கொண்டனர்.



Tags : Chief Ministers ,Nagaland ,Meghalaya ,PM ,Modi , Inauguration of Chief Ministers in Nagaland, Meghalaya: PM Modi attends
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...