×

வெம்பக்கோட்டை அருகே கோட்டையூர் கண்மாய்க்கு ஆஸ்திரேலியா, நைஜீரியா பறவைகள் வருகை-பறவைகள் சரணாலயம் அமைக்க கிராமமக்கள் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணை : வெம்பக்கோட்டை அருகே கோட்டையூர் கண்மாய்க்கு இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. எனவே இந்த பகுதிகளில் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட தாயில்பட்டி அருகே உள்ளது கோட்டையூர். இங்குள்ள கண்மாய்க்கு முதல் முறையாக வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன.

கோட்டையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் கோட்டையூர் கண்மாய் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புறத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளது. அதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து செங்கால் நாரை, கூழைக்கிடா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன.

பல ஆண்டுகளாக ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியாபுரம் கிராமத்திற்கு இந்த வகையான வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். இங்கு இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அதனுடைய நாட்டிற்கு திரும்பச் செல்வது வழக்கம். மேலும் இங்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள் ஆலமரம், புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களில் கூடு கட்டி குஞ்சு பொறிக்கின்றன.

தற்போது கோட்டையூர் கண்மாயில் குறைவான அளவில் தண்ணீர் இருப்பதோடு சாக்கடைகள் கலந்து துர்நாற்றம் வீசுகின்றது. எனவே பறவைகள் வெம்பக்கோட்டை ஆலங்குளம் போன்ற நீர்தேக்கங்களுக்கு உணவிற்காக சென்று வருகின்றன.மேலும் பறவைகள் அச்சமின்றி இருப்பதற்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டாசு, ஒலிபெருக்கி போன்றவற்றை நிகழ்ச்சிகளில் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல் முறையாக தாயில்பட்டி கோட்டையூர் கண்மாய்க்கு வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் ஆர்வமுடனும் வந்து ரசித்து செல்கின்றனர். வெளிநாட்டு பறவைகளுக்கு வசதிகள் ஏற்படுத்த, இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kotayur Kanmai ,Vembakottai , Ejayarampannai: Foreign birds have started coming to Kottayur Kanmai near Vembakotta for breeding.
× RELATED வெம்பக்கோட்டையில் தீ தொண்டு நாள் வார விழா