காபூல்: ஆப்கன் அரசு பெண்களின் உரிமைகளை ஒடுக்கும் வகையில் பல்வேறு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டுமொத்தமாகத் தாலிபான் அமைப்பினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் கைகளில் ஆப்கன் வந்தது. ஆட்சியை கைப்பற்றியது முதலே ஆப்கானிஸ்தானில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள், அடக்குமுறைகளை தாலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர்.முக்கியமாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் துணையின்றி பொது இடங்களுக்கு செல்ல தடை, விமானத்தில் பயணிக்க தடை, ஆடை கட்டுப்பாடு என பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆட்சியின் போது, பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என அறிவித்து கணவர்களுடன் சேர்ந்து வாழ பெண்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கனில் 10ல் 9 பெண்கள் தங்கள் கணவர்களால் கொடுமைக்கு ஆளாவதாக ஐ.நா. தெரிவித்து இருந்தது. இதையடுத்து அமெரிக்கா ஆதரவுடன் நடந்த கடந்த ஆட்சியில் பெண்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. மீண்டும் ஆட்சியை பிடித்த தாலிபான் அரசு, விவாகரத்து செல்லாது என அறிவித்ததுடன், கணவனுடன் வாழ பெண்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கின்றன. கணவர் மதுவுக்கு அடிமையாகி இருந்தாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று இருந்தாலோ மட்டும் பெண்களுக்கு விவாகரத்து பெறும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.