சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுக்கான பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயன்பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் 10 லட்சம் இளைஞர்கள் வேலை பெற நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டித் தேர்வில் மாணவர்கள் அதிகளவில் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வில் கலந்துகொள்ள மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என கூறினார். ஒன்றிய அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க பிரதமரிடம் வலியுறுத்தினேன் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ், அரசு தேர்வுகளான எஸ்எஸ்சி, ரயில்வே, வங்கி, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்று விக்கப்படும். இப்போட்டி தேர்வு பிரிவில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் தமிழ்நாடு இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.