சென்னை: போலீஸ் எஸ்.பி. பெயரில், போலி இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கி பண மோசடியில் பலர் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் சிபாஸ் கல்யாண். இவரது புகைப்படத்தை வைத்து திருவள்ளூர் ஐபிஎஸ் நண்பர் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கி, அதன் மூலம் பலரிடம் பணம் கேட்டு மோசடி நடந்து வருவதாக எஸ்.பி.க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவர், ‘‘தனது புகைப்படத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டினால், பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்று மோசடி வேலையில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.’’ என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்.பி. டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.