புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்ட பல்நோக்கு ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். துப்புரவு, சமையல், சீருடை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு கோரி 150க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திடீரென பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 40 ஊழியர்கள் மருத்துவக்கல்லூரியின் முதல்மாடியில் ஏறி முகப்பு பகுதியில் நின்று தற்கொலை முயற்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற ஊழியர்கள் கீழ்தளத்தில் நின்று கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்த கோரிமேடு போலீசார் மற்றும் மருத்துவனை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுக்க அரசிடம் வலியுறுத்துவதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.