சென்னை: சென்னை ஐஐடியின் சார்பில் இளங்கலை தரவு அறிவியல் படிப்பு தொடங்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது, ஜேஇஇ தேர்வு எழுதாமலேயே, ஆன்லைன் வாயிலாக பயிலும் நான்கு ஆண்டு ‘இளங்கலை மின்னணு அமைப்பு பட்ட படிப்பு’ தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு 88 ஆயிரம் முதல் 5 லட்சத்து 92 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வாயிலாக பயிலும் பட்டப்படிப்பை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
புதிய கல்வி கொள்கையின் படி, டிஜிட்டல் துறையை வளர்க்க அரசிடம் நிலையான திட்டங்கள் உள்ளது. இதன் மூலம், செமிக்கண்ட்டர் உருவாக்கம் இந்தியாவில் சாத்திய கூறு உள்ளது. 5ஜி சோதனையை வெற்றிகரமாக முடித்தது சென்னை ஐஐடி தான் என்றார்.அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஐஐடி இயக்குநர் காமகோடி, ‘‘எலக்ட்ரானிக்ஸ் தெரியவில்லை என்றால், நம்மால் வரும் காலத்தில் ஒரு சர்வீஸ் சென்டர் கூட நடத்த முடியாது. இளங்கலை தரவு அறிவியல் படிப்பை ஐஐடியில் ஆன்லைன் வாயிலாக 17 ஆயிரம் மாணவர்கள் பல கட்டங்களாக பயின்று வருகின்றனர். அவர்களில், 400க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அவர்களை வேலைக்கு எடுக்க தயாராக உள்ளனர்.
இந்த இளங்கலை படிப்பின் மூலம், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அடிப்படையை முதலாம் ஆண்டு முடிக்கும்போதே கற்றுக்கொள்ள முடியும். சென்னை ஐஐடி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை உடன் இணைந்து 9 முதல் 12ம் வகுப்புகளை சேர்ந்த 250 அரசு பள்ளிகளில் பள்ளிக்கு தலா 400 மாணவர்கள் என அடுத்த ஒரு மாத காலத்தில் எலக்ட்ரானிக் சிஸ்டம் தொடர்பான கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு வகுப்புகள் எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
அனைவருக்கும் ஐஐடி என்ற வகையில், ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு குறைவாக உள்ள மாணவர்களை இலவசமாக இந்த படிப்பில் இணைக்கவும், 5 லட்சம் குறைவான வருமானம் உள்ள பெண் குழந்தைகளுக்கும் / பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கும் கல்வி உதவித்தொகை அளிக்கும் வகையில் ஐஐடி இந்த இளங்கலை படிப்பை தொடங்கியுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.