காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேளாண்மை திட்டப் பணிகள் மற்றும் செயல்பாடுகளை கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், மாகறல் கிராமத்தில், எழிலரசி வீரராகவனுக்கு, வேளாண் பொறியியல் துறை மூலம், ரூ.4,20,000 (75 சதவீதம்) மானியத்தில் டிராக்டரும், ஒழுகரை ஊராட்சியில் ஆறுமுகத்துக்கு, பண்ணை குட்டை அமைத்து அட்மா திட்டத்தின் மூலம், ரூ.4,500 மானியத்தில் மீன் குஞ்சுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இவற்றை கலெக்டர் ஆர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அதனைதொடர்ந்து, மருதம் கிராமத்தில் ராமகிருஷ்ணனுக்கு, அட்மா திட்டத்தின் மூலம் ரூ.4 ஆயிரம் மானியத்துடன் அசோலா உயிர் உரம் வளர்க்கப்படுவதை ஆய்வு செய்த கலெக்டர், அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, ராமகிருஷ்ணனின் மனைவி தங்களிடம் 10 கறவை மாடுகள் இருப்பதாகவும், அம்மாடுகளுக்கு அசாலா மாட்டு தீவனமாக வழங்கப்படுகிறது. இதனால், மாடுகள் அதிக பால் உற்பத்தி பயனுள்ளாத உள்ளதால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்று கலெக்டரிடம் தெரிவித்தார்.
மேலும், கட்டியம்பந்தல் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 2 விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்பு கருவியும், 2 விவசாயிகளுக்கு தார்பாலின் மற்றும் 20 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் கலெக்டர் வழங்கினார். இதனையடுத்து, அக்கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம், நந்தினி சிவகுமாருக்கு ரூ.1,43,000 மானியத்துடன் சூரிய உலர்த்தி கூடாரம் அமைத்து தரப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்த கலெக்டர், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, இணை இயக்குனர் இளங்கோவன், கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் கணேசன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ராஜ்குமார், பிரின்ஸ் கிளமன்ட், முகுந்தன், வேளாண்மை உதவி இயக்குநர், உத்திரமேரூர், தங்கராஜ், உதவி செயற்பொறியாளர் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.